தென்றலின் உச்சமாய் வீசிய
மழைத்துளியின் சில துளிகள்....
அவள்...
அவளா...
அவளால்...!
மையல் விழிகளில்
மையிட்டுருப்பாளோ !
சுருள் முடியின்
சுற்றளவு சொல்வாளோ !
நொடிகளில் லட்சம் மொழிகள்
விழிகளில் சொல்வாளோ !
அனைத்துவகை பூக்களின் மாநாட்டில்
தேசிய மலராக அறிவிக்கப்பட்டவளோ !
புத்தகத்தின் மத்தியபிரதேசத்தில்
அரிசி போட்டு மயில்தோகை வளர்பவளோ !
பௌர்ணமி நிலவையும்
வெட்கம் கொள்ள செய்பவளோ !
நடைவண்டி ஓட்டிருப்பாளா !
கண்ணாடி வளையல் மீது
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருபவளோ !
இடது கை பழக்கம் கொண்டவளோ !
நாடி துடிப்பில்
நாட்டின் மீது பற்று கொண்டவளோ !
படிப்பில்
பட்டம் பெற்றிருப்பாளோ !
பூவானவல்
பூச்செடிகளை வளர்பவளோ !
விழியில்
புன்னகை செய்பவளோ !
மொழிகள்
நூறு கற்றவளோ !
அன்பின்
இலக்கண மொழியாளோ !
பாட்டி மருத்துவம் படித்தவளோ !
ஆவி பறக்க
அசைவம் உண்பவளோ !
விழிகளில்
தூறல் செய்பவளோ !
வெள்ளி செவ்வாய்
கோவில் செல்பவளோ !
ஆடு மாடு கோழி கூட
அரவணைத்து நடப்பவளோ !
கோபத்தில்
கொள்ளை பிரியம் கொண்டவளோ !
மருமகள்
மகளாக வருவாளோ !
தலைகோதி
தாலாட்டு சொல்வாளோ !
மடி சாய்த்து மனதின்
மலைபாரம் குறைப்பவளோ !
அரும்பிய மீசையினால்
ஆன்மாவை ஆள்பவளோ !
பாவையினர் பூச்சூடும்போது
என்னை அள்ளி சூடுபவளோ !
மொட்டை மாடியில் கூழ்வடகம்
குனிந்து ஊற்றுபவளோ !
அதிசயமாகி போன
அடுக்களை சமையல் செய்பவளோ !
அதிகாலை சூரியனுக்கு
காட்சி தருபவளோ !
அச்சத்தில்
அத்தானை கட்டிக் கொள்பவளோ !
சந்தேகத்தை
சாக்கு பையில் கசக்கி இட்டவளோ !
வாசல் வந்து விழியால் செய்தி சொல்லி
வழியனுப்புவாளோ !
என் தோள் சாய்ந்து
சொர்க்கம் காண்பாளோ !
காக்கைக்கும்
கல்லில்லா சோறு படைப்பாளோ !
மல்லிகைக்கும் மஞ்சளுக்கும்
சொந்தகாரி இவள்தானோ !
பைங்கிளி தமிழில்
என் கவிக்கு உயிர் தருபவளோ !
அன்னப்பறவை அசந்து போக
குழந்தைக்கு பால் தருபவளோ !
மொத்தத்தில் சத்தமில்லா
ஒரு முத்தத்தில்
என் இதயம் வந்தடைவாளோ !
மழை நின்றது !
No comments:
Post a Comment